Freitag, 14. September 2012

மகராஜா யோகம் 10

ஆரப்பா கரும்பாம்பு ஆறிலேற அப்பனே செம்பாம்பு யீராறேற சீரப்பா பிறந்தகுரு கேந்திரமேற சிவசிவா அஷ்டலெட்சுமியாள் யோகம் கூரப்பா கெணங்களுக்கு பெலிகொடுத்து கெணத்திலுள்ள திரவியமும் வெளியெடுத்து பாரப்பா பாக்கியங்கள் கண்ணால் பார்ப்பன் பண்பாக புலிப்பாணி பகர்ந்தேன் பாரே. இன்னுமொன்றையும் நீ கருத்துடன் கேட்பாயாக! இராகு எனும் கரும்பாம்பு இலக்கினத்திற்கு ஆறில் நிற்கவும் செம்பாம்பு ஆன கேது 12ஆம் இடத்தைச் சேரவும் சிறப்புடைய குருபகவான் கேந்திரம் ஏறியும் நிற்கப் பிறந்த ஜாதகன் அஷ்டலக்ஷ்மியாள் யோகம் பெற்றவனாவான். சிவபரம்பொருளின் கருணையிதுவே. எனவே இச்சென்மன் பூதங்களுக்கு பலி பூசை முதலியன நல்கித் தன் மனையிலோ விளைவயலிலோ உள்ள கிணற்றிலிருந்து அனேக திரவியங்களை வெளியெடுத்து அதனால் வெகுவான பாக்கியங்களையும் அனுபவிப்பான், தன் மனையில் மகிழ்ச்சி இழையோடுவதைக் காண்பான் என்று போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி கூறினேன்.  

Keine Kommentare:

Kommentar veröffentlichen