Sonntag, 9. September 2012

Pulippani:-காப்பு






ஆதியெனும் பராபரத்தின் கிருபைகாப்பு அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு சோதியெனும் பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு சொற்பெரியகரிமுகனுங் கந்தன்காப்பு நீதியெனு மூலகுரு முதலாயுள்ள நிகழ்சித்தர்போகருட பாதங்காப்பு வாதியெனும் பெரியோர்கள் பதங்காப்பாக வழுத்துகிறேன் ஜோசியத்தின் வன்மைகேளே -விளக்க உரை- ஆதியென்றும் பராபரை என்றும் அகிலமெல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியாளின் திருவடிக்கமலங்கள் எனக்குக் காப்பாக அமையும். என்றென்றும் எவ்வெவர்க்கும் அன்பு வடிவாக இயங்கி ஆதரித்திடும் மனத்திற்குகந்த இன்பம் அருளும் மனோன்மணியான வடிவுடை நாயகியின் செந்தாள் மலர்க்கமலம் எனக்குக் காப்பாக அமையும். மற்றும் சோதிவடிவாக இலங்கி மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் நுகர்வாய் அமைந்த ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் ஐம்புல நுகர்வுகளுக்கு உரிமை கொண்ட தெய்வங்கள், எனக்குக் காப்பாக அமைவதுடன் ஓங்காரத்துட் பொருளைத் தன்னுருவிலேயே கொண்ட வேலமுகத்தானும் அவனது விருப்பினுக்குரிய அருட்பெருங் கடலான திருமுருகனும் எனக்கு [என்கவிக்கு] காப்பாக அமைவதுடன் நீதியினையே என்றும் பொருளாய்க் கொண்டு இலங்குகின்ற பிரகஸ்பதி முதலாக உள்ள சித்தர்களில் என் குருவாகிய போகரது திருவடிகளும் எனக்குக் காப்பாக அமைவதுடன் என்றென்றும் தங்கள் அருள் நோக்கால் ஆதி முதல் என்னை ஆதரிக்கும் சான்றோர் தமது திருவடிக்கமலங்களைச் சிரசில் சூடி நீதியான முறையில் சோதிடத்தின் வண்மையினை நான் உரைப்பேன். கேட்டுப் பயனடையுங்கள். (இனி வாழ்த்தாவது தான் எடுத்துக் கொண்ட முயற்சி இனிது முடிதற் பொருட்டு எற்புடைக் கடவுளையோ வழிபடு கடவுளையோ வாழ்த்துவதாம்) இது அகலவுரை.

Keine Kommentare:

Kommentar veröffentlichen